நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு: பலி 24ஆக உயர்வு
மகாராஷ்டிரத்தின் நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரம்பும் போது திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
நாசிக் மாவட்டத்தில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், கரோனா நோயாளிகளுக்கு சரிவர ஆக்ஸிஜன் வழங்கமுடியாததால், அங்குள்ள 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆக்ஸிஜன் வாயுவைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டேங்கரில் இருந்த வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாகவே வாயுக்கசிவு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வாயுக்கசிவு தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.