திருவாரூர்: ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி போக்குவரத்து வணிக நிறுவனங்கள் இயக்கம் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. மளிகை கடைகள், காய்கறி கடைகள், வணிக நிறுவனங்கள், சிறு பெட்டிக் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மருந்து கடைகள் திறந்திருந்தன. அம்மா உணவகம் வழக்கம் போல் இயங்கியது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் மட்டும் ஆங்காங்கே துப்புரவு பணிகளை செய்து கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் ஒரு சில மண்டபங்களில் திருமணம் நடைபெற உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்த இடங்களில் குறைந்த அளவு உறவினர்களுடன் திருமணம் நடைபெற்றது.