நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 140 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில், நாடு முழுவதும் நக்சல்களால் கொல்லப்பட்ட பொதுமக்கள், பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் எண்ணிக்கை குறித்து எழுத்துபூர்வமாக சமர்பிக்கப்பட்டது.
அதில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது,
நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டில் நக்சல்கள் நடத்திய 665 தாக்குதல்களில் பொதுமக்கள் 140 பேர், பாதுகாப்புப் படையினர் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 103 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 315 தாக்குதல்களில், 75 பொதுமக்கள், 36 பாதுகாப்புப் படையினர் மற்றும் 44 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.