தில்லி எல்லைகளில் போக்குவரத்து தடைக்கு காவல்துறை அமைத்திருக்கும் தடுப்புகள் தான் காரணம் என்று விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி, காஜிப்பூா் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.
குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து எல்லைகளில் உள்ள விவசாயிகள் தில்லிக்குள் நுழையாதபடி ஆழமான குழிகள், கம்பி வேலிகள் கொண்டு தடுப்புகள், இரும்பு கம்பிகளால் ஆணிகளை கொண்டு தடுப்புகள் அமைத்தும் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் பேசியதாவது,
தில்லிக்குள் நுழைய போக்குவரத்து தடைக்கு விவசாயிகள் காரணம் இல்லை, காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்புகளே காரணம் என்று தெரிவித்தார்.
மேலும், எதிர்கட்சித் தலைவர்கள் ஆதரிக்க வருவதால் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் அதை அரசியல் செய்யக்கூடாது. தலைவர்கள் போராட்டக் களத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்தால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.