உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 54 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் பிப்.7ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 8-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை 6 சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து மொத்தம் 54 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில், 29 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், 150 பேரின் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.