பயிருக்கு ஏற்றப்படாத விலை உயர்வு, தற்போது பெட்ரோலுக்கு மட்டும் உயர்த்துகின்றனர் என விவசாயசங்கத் தலைவர் ராகேஷ் திக்காயத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதனால், விவசாயிகளின் போராட்டம் நவம்பர் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, இன்று மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை விவசாய சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹரியாணாவின் காரக் புனியா பகுதியில் விவசாயிகளிடம் பேசிய ராகேஷ் கூறுகையில்,
பயிர்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை, ஆனால் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், எங்கள் டிராக்டரை மேற்குவங்கத்திற்கும் கொண்டு செல்வோம். அங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை.
விவசாயிகள் மீண்டும் பயிரிட சென்றுவிடுவார்கள் என்ற தவறான எண்ணத்தில் மத்திய அரசு இருக்கக்கூடாது. வேளாண் சட்டத்தை இயற்றினால் எங்கள் பயிர்களை எரிப்போம் எனத் தெரிவித்தார்.