தில்லி டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறையில் ஈடுபட்ட 152 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போர்க்களமாக மாறியது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
இதை தொடர்ந்து விடியோ ஆதாரங்களை கைப்பற்றிய தில்லி காவல்துறை, வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது,
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இதுவரை 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய சங்கத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர்.
தில்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வி கிடையாது. ஏனெனில், தில்லி முழுவதும் அன்றைய தினம் பாதுகாப்பு போடப்பட்டது, தடுப்புகள் வைக்கப்பட்டது.
சில விதிமுறைகளுடன் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கினோம். ஆனால், விவசாயிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் எங்களுக்கு துரோகம் இழைத்தனர். இருப்பினும், காவல்துறை கடமைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றியது எனத் தெரிவித்தார்.