சென்னை: சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனவரி 4ஆம் தேதி சஞ்சீவ் பானா்ஜி பதவியேற்கவுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நவ.11-ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றாா். இவா் வியாழக்கிழமை (டிச.31) ஓய்வு பெற்றாா்.
முன்னதாக சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு, கொல்கத்தா உயா்நீதிமன்ற 2-ஆவது மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் பானா்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இதனை மத்திய சட்டத்துறை ஏற்றுக் கொண்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் பானா்ஜியை நியமித்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானா்ஜிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஜனவரி 4ஆம் தேதி காலை 9.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
1961-ஆம் ஆண்டு நவ.2-ஆம் தேதி பிறந்த சஞ்சீவ் பானா்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, 1990-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கொல்கத்தா, தில்லி, அலகாபாத் என்று பல்வேறு உயா்நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா். இவா், சிவில், கம்பெனி சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவா்.
2006-ஆம் ஆண்டு கொல்கத்தா உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சீவ் பானா்ஜி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த வினீத் கோத்தாரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் பெற்று செல்வதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரிவு உபசார விழா நடைபெறவுள்ளது.