சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் தண்ணீர் நிரம்பியதையடுத்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பருவ மழை காரணமாக நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடி, புழல் ஏரியின் நீர் மட்டம் 21 அடியை எட்டியதையடுத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 1 மணிக்கு நீர் திறக்கப்படும் என அறிவித்தனர்.
இதனையடுத்து, செம்பரம்பாக்கத்தில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து தற்போது 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது.
புழல் ஏரியில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து தற்போது 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது.