ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் கரோனா புதிய உச்சத்தை எட்டியதையடுத்து அவசரகால நிலையை அமல்படுத்தி ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
டோக்கியோ மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,447 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு பிரதமர் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,
“டோக்கியோ பெருநகரத்தில் கரோனா தொற்றின் பரவலை தடுப்பதற்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை அவசர நிலை அறிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, உணவகங்கள் மற்றும் மதுவிடுதிகள் இரவு 8 மணிக்குள் மூட வேண்டும். உடற்பயிற்சிக் கூடம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை குறைந்த நேரங்கள் மட்டுமே செயல்பட வேண்டும்.
அலுவகங்கள் 70 சதவீதத்திற்கு குறைவான ஊழியர்களுடன் மட்டுமே செயல்படவேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் கடந்த ஏப்ரல் 2020இல் டோக்கியோ உள்பட 6 மாகாணங்களுக்கு அவசர நிலை முதல்முறையாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது டோக்கியோ மாகாணத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பு அறிவிக்கப்பட்டதை விட அதிகளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.