நாடு முழுவதும் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சுனில் கேதார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், கேரளம், ஹரியாணா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் தொற்று நோயால் பறவைகள் பலியாகி வருகின்றன.
இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பரவாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில கால்நடைத்துறை அமைச்சர் கூறியதாவது,
"எங்களிடம் உள்ள தகவல்களின்படி, ராஜஸ்தான், குஜராத், கேரளம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இதில் சில மாநிலங்களுடன், மகாராஷ்டிர மாநிலம் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், கடுமையான விழிப்புணர்வைக் கடைப்பிடிக்குமாறு மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு சிவப்பு எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளோம். ஏதேனும் பறவைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம், " என்று அமைச்சர் கூறினார்.
மேலும், புதன்கிழமை தாணே மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இறந்த பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில், பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கவில்லை என முடிவுகள் வந்துள்ளதாக தெரிவித்தார்.