திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கான அனுமதி ரத்து: தமிழக அரசு

திரையரங்குகளில் நூறு சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை வெள்ளிக்கிழமை தமிழக அரசு ரத்து செய்தது.
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கான அனுமதி ரத்து
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கான அனுமதி ரத்து

திரையரங்குகளில் நூறு சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை வெள்ளிக்கிழமை தமிழக அரசு ரத்து செய்தது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில்,

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.   

கடந்த 4.1.2021 அன்று,  தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், ரயில், பஸ் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாதலங்கள், திரைப்பட படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100 சதவீத இருக்கைபயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்தனர்.  

கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையினை பரிசீலனைசெய்து, 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. 

தற்போது, மத்திய அரசின் அறிவுரையை கருத்தில்கொண்டும், இது குறித்த வழக்கு மாண்பமை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைகருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.  

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.  இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது.

கரோனா நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com