மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவிய லாத்தூர் மாவட்டத்தில் 15,000 பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிரத்தின் பார்பனி, பீட் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், லாத்தூர் மாவட்டத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து லாத்தூர் மாவட்ட ஆட்சியர் பிருத்விராஜ் கூறியதாவது,
கேந்திருவாடியில் திங்கள்கிழமை வரை குறைந்தது 225 பறவைகள் இறந்துள்ளன, அதே நேரத்தில் சுக்னியில் 12 கோழிகளும், உத்கீர் தாலுகாவின் வஞ்சர்வாடியில் நான்கு கோழிகளும் இறந்துள்ளன.
கேந்திராவாடி மற்றும் சுக்னி பகுதிகளில் இறந்த பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன, அவற்றின் முடிவுகள் தொற்றுநோய்க்கு சாதகமாக வெளிவந்துள்ளன, மேலும், வஞ்சர்வாடிக்கான முடிவுகளுக்காக காத்திருக்கின்றோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பாதிக்கப்பட்ட பறவைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் 1 கி.மீ சுற்றளவில் கிட்டத்தட்ட 15,000 பறவைகள் உள்ளன. அப்பகுதியை சுற்றி 10 கி.மீ சுற்றளவில் "எச்சரிக்கை மண்டலம்" உருவாக்க ஜனவரி 10 ஆம் தேதி லாத்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது எனத் தெரிவித்தார்.