மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் உடல்நிலை குறித்து நேரில் சென்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். பின், அடுத்தக்கட்ட சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி பாஜக எம்.பி.யுமான ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக், தனது மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் உள்ளிட்ட 4 போ் கோவாவில் இருந்து கா்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டத்திலுள்ள எல்லாப்பூா் சென்றுள்ளனா். எல்லாப்பூரில் இருந்து திங்கள்கிழமை இரவு கோகா்ணாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனா். அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் திடீரெனக் கவிழ்ந்துள்ளது. இதில் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோா் படுகாயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் அங்கோலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, சிகிச்சை பலனளிக்காமல் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்ட 3 பேருக்கு கோவா மருத்துவக் கல்லூரியில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கோவாவிற்கு நேரில் சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்ரீபாத் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின், அவருக்கு அளிக்கப்படவுள்ள மேற்சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார்.