வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்கால் நீர் பாசனக் குழுவினர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தனர்.
இப்பகுதி காங்கயம் - வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் அரசு விதிமுறைப்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு இரண்டு சுற்று தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் 28 நாள் அடைப்பு, 3 நாள்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீரை வைத்து ஆடு, மாடுகளின் தண்ணீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. எப்படி விவசாயம் செய்வது என கேள்வியெழுப்பும் விவசாயிகள், தங்களுக்கு விதிமுறைப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும், போராடியும் தீர்வு கிடைக்கவில்லை.
இதையடுத்து தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி ஜன. 19 ம் தேதி செவ்வாய்க்கிழமை வெள்ளக்கோவில், காங்கயத்தில் கடையடைப்பு, அதே தினத்தில் காங்கயம் நான்கு சாலைச் சந்திப்பு அருகில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் அறிவித்து, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.