வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை உயிரிழந்த ஆதரவற்ற முதியவரை கொட்டிய மழையில் தன்னார்வலர்கள் சகல மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சேர்ந்தவர் நாகராஜ் (30). இவர் காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகில் தற்போதைய அடைமழை குளிரில், ஒரு முதியவர் பசி மயக்கத்தில் மெலிந்த தேகத்துடன் படுத்துக் கிடந்ததைப் பார்த்தார். வயது 80 இருக்கலாம்.
பலர் பொங்கல் விடுமுறை தினத்தில் தங்களுடைய வேலைகளில் கருத்தாக இருக்க, நாகராஜ் அந்த முதியவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து விசாரித்தபோது, முதியவரால் பேசமுடியவில்லை. யாருமில்லாத அனாதை என்பது அவருடைய சைகையால் தெரியவந்தது. பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்த அவர், முதியவரை ஏற்றிச் சென்று முதலுதவி செய்து, சொரியங்கிணத்துப்பாளையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.
பின்னர் சில மணி நேரத்தில் அந்த முதியவர் இறந்து போனார். இதையடுத்து வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் டி.சசிகலாவுக்கு தகவல் கொடுத்து, காவல்துறையினர், நகராட்சி பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து மாலை, மரியாதை செலுத்தி சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.