சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று(வியாழக்கிழமை) மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று மாலை 6.40 மணியளவில், மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கிற்காக சபரிமலையின் நடை மூன்று மாதங்கள் திறக்கப்படும். அந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.
நிகழ்வாண்டில் கரோனா காரணமாக முதலில் தினந்தோறும் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பின் 5,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கரோனா பரிசோதனை சான்றிதழ் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மகரவிளக்கின் முக்கிய நிகழ்வான மகரஜோதி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
மகரஜோதி நிகழ்வு இன்று(ஜன.14) மாலை 6.40 மணியளவில் பொன்னம்பல மேட்டில் 3 முறை ஒளிர்ந்தது. பின், ஐயப்பன் சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டது.
வரும் 19ஆம் தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை திறந்திருக்கும். அடுத்த நாள் கோயில் நடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வாண்டில், 54 நாட்களில் 1,32,673 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். ரூ. 16.30 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.