புதுச்சேரியின் சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவையானது 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் சட்டப்பேரவை கூடியது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் சட்ட நகல்களை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையின் போது கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்குமுன் பஞ்சாப், கேரளம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.