புதுக்கோட்டை: அரிமளம் அருகே ஜல்லி ஏற்றி சென்ற லாரி ஏறி, சாலையோரத்தில் படுத்திருந்த 13 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் கிடை அமைத்து செம்மறி ஆடுகள் மேய்த்து வருகிறார்.
வழக்கம் போல புதன்கிழமை ஆடுகளை மேய்த்துவிட்டு அரிமளத்தில் இருந்து திருமயம் செல்லும் சாலை ஓரம் கிடையில் அடைத்து வைத்துள்ளார்.
கிடையிலிருந்த ஆடுகள் சாலை ஓரம் படுத்திருந்தன. வியாழக்கிழமை அதிகாலை அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் படுத்திருந்த ஆடுகள் மீது மோதி ஏறிச் சென்றது.
இதில், 13 ஆடுகள் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாயின. லாரி ஓட்டுநர் ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன், அரிமளம் போலீசில் சரணடைந்தார். மேலும் விபத்து குறித்து ஆட்டின் உரிமையாளர் மதி அளித்த புகாரின்பேரில் அரிமளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.