தில்லியில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து 4 கடைகளுக்கு பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை குறைந்த காரணத்தால் கடந்த வாரம் முதல் தில்லியில் உள்ள அனைத்து கடைகளும் சில விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லி சென்ட்ரல் மார்க்கெட்டின் லாஜ்பட் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் கூறியது,
தீ விபத்து குறித்து காலை 10.20 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு 30 வாகனங்களில் 100 வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தீ பரவுவதற்கு முன்பு அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.