கரோனா பரவல் குறைந்ததையடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 18 முதல் மீண்டும் வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தில்லியில் கரோனா பரவல் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அதிகளவிலான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை தவிர பிற வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை ஏப்ரல் 22ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தில்லி முழுவதும் அமல்படுத்தப்பட்ட 5 வார முழுப் பொதுமுடக்கத்தால் நோய்த் தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து, பல தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வருகின்ற ஜூன் 18 முதல் வெளிநோயாளிகளின் பிரிவு படிப்படியாக செயல்படுத்தப்படும் என தில்லி எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இணையதளத்தில் அல்லது தொலைபேசி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.