காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம் குறித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கருத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடன் மேக்கேதாட்டு அணை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கர்நாடக அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்வது காவேரி ஆற்றின் நீர். இந்த காவேரிக்கு நடுவே கர்நாடக அரசு கட்ட முயலும் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பல சட்டப் போராட்டங்களை முந்தைய அதிமுக அரசு நடத்தியுள்ளது.
மேலும், காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்ட எனது தலைமையிலான அரசு காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதை நிறுத்தகோரி பிரதமரிடம் வலியுறுத்தியது, மேலும் இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு அது தற்போது நிலுவையில் உள்ளது.
இச்சூழ்நிலையில் கர்நாடக முதலமைச்சர் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும் என அறிவித்திருப்பதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இந்த விவகாரத்தை கூர்மையாக கவனித்து காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரை முழுமையாக பெற்று தமிழக நலன்காக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்