புதுச்சேரி மாநிலத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த ரங்கசாமியிடம் கேட்டபோது, கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளதாகவும், முக்கிய முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும் என கூறிவிட்டு சென்றார். ஆலோசனையில் ஈடுபட்ட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அக் கூட்டணியில் 18 தொகுதி வரை கேட்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் இறுதியாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவிக்கும் முடிவுதான் இறுதியாகும். எனவே விரைவில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.