காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்துவது குறித்து இன்று நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மத்திய காரிய கமிட்டி கூட்டம் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கரோனா பரவல், தடுப்பூசி போடும் பணி, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஜூன் மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என ஜன.22ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் குழுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த ஆலோசனையில் பங்கேற்ற பெரும்பாலானோர் ராகுல் காந்தியை அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்க முன்மொழிந்தனர். இருப்பினும், சில மூத்த தலைவர்கள் கரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.