கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நடைபெறும் கரோனா அறிகுறி சோதனையை திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குனர்(தணிக்கை) சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை, தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள 320 தொழிற்சாலைளில் அதிகமாக கரோனா பரவல் காணப்படுகிறது. கரோனா முதல் அலை உச்சத்தில் கும்மிடிப்பூண்டியில் நாளொன்றுக்கு 40-50. கரோனா பாதிப்புகள் இருந்த நிலையில் கடந்த 10நாட்களாக கும்மிடிப்பூண்டியில் தினமும் 100-120 கரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் தொற்று பாதிப்பை குறைக்கும் வகையில் கும்மிடிப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை, வீட்டில் உள்ளவர்களுக்கு சளி இருமல் உள்ளதா என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி முழுக்க வீடுகள் தோறும் நடைபெறும் காய்ச்சல் பரிசோதனையை மாவட்ட உதவி இயக்குனர்(தணிக்கை) சுதா கீழ்முதலம்பேடு ஊராட்சி அரியத்துறையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வீடுகளில் இருப்பவர் வெப்ப சோதனை செய்யப்பட்டது, மேலும் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என பரிசோதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரமூர்த்தி, ஊராட்சி செயலாளர் சாமுவேல் உடனிருந்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய உதவி இயக்குனர் சுதா, பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தால் முககவசம் அணிய வேண்டும் என்றும், 45வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து உதவி இயக்குனர் சுதா, கும்மிடிப்பூண்டியில் முககவம் அணியாமல் இருந்தவர்களிடம் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டார். பின்னர் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஆய்வு செய்த உதவி இயக்குனர் சுதா, தொழிற்சாலைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, தொழிலாளர்களுக்கு முககவசம், கிருமிநாசினி தொழிற்சாலை நிர்வாகத்தால் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.