என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் தோல்விக்கு பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகிய நிலையில், கமல்ஹாசன் விடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரைவில் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ள அவர், பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம். கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே.
நாம் ஒரு சிறு விதைதான், இது மண்ணைப் பற்றிக் கொண்டால் அது காடாக மாறும். கட்சியின் உட்கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி விளையாடியது இனி நடக்காது.
பொய் குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும், உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள். சென்றவர்கள் திரும்பி வந்தால் அவர்களை சேர்த்து கட்சியை மீண்டும் மாசுபடுத்த விடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.