மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் குறைந்தது ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன என்று முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை தெரிவித்தார்.
யாஸ் அதி தீவிர புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே இன்று காலை கரையை கடந்த நிலையில், பல பகுதிகளில் உள்ள வீடுகள் பலத்த காற்று மற்றும் கனமழையால் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா,
யாஸ் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து 15,04,506 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புயலால் குறைந்தது ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
பூர்பா மெடினிபூர், தெற்கு 24 பர்கானாக்கள் மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் விரைவில் பார்வையிடவுள்ளேன்.
கள ஆய்வுக்கு பின் சேதங்களின் மதிப்பு குறித்து இறுதி அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.