நாடு முழுவதும் 130 நாள்களில் 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறுகிய காலத்தில் அதிக பேருக்கு தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 130 நாள்களில் 20,06,62,456 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 4,35,12,863 பேர் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்க 124 நாள்களில் 20 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. அடுத்தபடியாக பிரிட்டனில் 168 நாள்களில் 5.1 கோடி டோஸ், பிரேசிலில் 128 நாள்களில் 5.9 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட 42 சதவீதம் பேர், 45 வயதுக்கு மேற்பட்ட 34 சதவீதம் பேருக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் முதற்கட்ட பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.