ஆனந்தகிருஷ்ணன் மறைவு: முதல்வர் இரங்கல்

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு. ஆனந்தகிருஷ்ணன்
மு. ஆனந்தகிருஷ்ணன்

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன்(92), நுரையீரலில் தொற்று காரணமாக ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். 

இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில்,

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்மஸ்ரீ எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாணியம்பாடியில் பிறந்து இந்தத் தரணி போற்றும் வகையில் - நேர்மையான -
அறிவுக்கூர்மை மிகுந்த கல்வித் தொண்டாற்றிய அவர் மாணவ சமுதாயத்தின்
கலங்கரை விளக்கம். கான்பூர் ஐ.ஐ.டி.யின் தலைவராக இருந்த அவரை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்தார்.அப்பணியில் இருந்த போது - பல்கலைக்கழக மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை அளிக்கும் உன்னத உட்கட்டமைப்பை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழை உலகெங்கும் பரப்பியவர் ஆனந்தகிருஷ்ணன்.

“வெளிப்படைத்தன்மை மிகுந்த நிர்வாகம் - மாணவர்களின் கல்வி முன்னேற்றம்” ஆகிய இரண்டையும் தனது இரு கண்கள் போல் கருதி எந்தப் பொறுப்பிலும் பணியாற்றிய அவர்தான் கழக ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்குக் காரணமான கதாநாயகனாக இருந்தவர். அனந்தகிருஷ்ணன் கொடுத்த அறிக்கைதான் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கண்களைத் திறந்தது என்பதை இன்று பொறியாளர்களாக இருக்கும் - மருத்துவர்களாக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற - நடுத்தர ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் நன்கு உணருவர். அது மட்டுமின்றி- அவர் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பப் புரட்சி நடைபெறுவதற்கான முதலமைச்சரின் ஆலோசகராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.

பொறியியல் கல்விச் சேர்க்கையில் ஒற்றைச் சாளரமுறையை முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கும், தமிழ் இணைய மாநாடு நடத்தி, இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப் படுத்துவதற்கான ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்.

“அறிவுக்களஞ்சியம்” என்று அழைக்கப்படும் ஆனந்தகிருஷ்ணன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் போற்றிய தலை சிறந்த கல்வியாளர். ஏன், இந்த நாடே போற்றும் நிர்வாகத் திறன் படைத்தவர். அர்த்தமிகுந்த- அறிவுசார்ந்த கல்வி கட்டமைப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் தனது இறுதி மூச்சு வரை பயணித்த- தமிழகத்தின் பெருமைக்குரிய கல்வியாளரை இழந்திருப்பது - கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

டாக்டர் மு. ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும் - உறவினர்களுக்கும் - ஆசிரியர், பேராசிரியர் மற்றும் இன்று வரை அவர் மீது தீராத அன்பு செலுத்தி வரும் மாணவ சமுதாயத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com