கரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு லட்சம் பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு காலகட்டமான ஏப்ரல் 19 முதல் மே 30 வரையில் கரோனா நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவல்களை தில்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 19 முதல் மே 30 வரை முகக்கவசம் அணியாத 90,000 பேர், சமூக இடைவெளி கடைபிடிக்காத 15,184 பேர், ஊரடங்கை மீறி பொது இடங்களில் கூடிய 1,193 பேர், பொது இடத்தில் எச்சில் துப்பிய 63 பேர், மது அருந்திய 118 பேர் என மொத்தம் 1,06,558 பேருக்கு அபராத ரசீது வழங்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் 1,080 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.