போடி: போடியில் புதன்கிழமை இரவு மாட்டு வண்டி மீது பைக் மோதி இளைஞர்கள் இருவர் பலியானது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் செல்வம் மகன் பிரதீப் (27). இவரது நண்பர் அந்தோனி மகன் பிரபாகரன் (28). இருவரும் போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இரவில் சென்றுள்ளனர். பிரதீப் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இருட்டாக இருந்துள்ளது. போடி நறுமனப் பொருள்கள் நல வாரிய அலுவலகம் முன் மோட்டார் பைக் சென்றபோது முன்னாள் வைக்கோல் ஏற்றிச் சென்ற மாட்டு வண்டி சென்றுள்ளது.
இதில் திடீரென மாட்டு வண்டி செல்வது தெரியாமல் நிலை தடுமாறி மாட்டு வண்டி மீது மோதிய இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்த்ததில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.