புது தில்லி: கடந்த பல நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் மாதாந்திர கௌரவ ஊதியம் மற்றும் உதவித்தொகையை தில்லி அரசு உயர்த்த இன்று முடிவு செய்துள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர கௌரவ ஊதியம் மற்றும் உதவித்தொகை மார்ச் மாதம் முதல் வழங்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் தெரிவித்தார்.
இதுவரை அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடைப்பேசிகளை பராமரிக்க ஊதியமாக 9,678 ரூபாயும், தகவல் தொடர்பு உதவித்தொகையாக, 200 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது தில்லி அரசு அங்கன்வாடி பணியாளர்களின் மாதாந்திர கௌரவ ஊதியத்தை ரூ.11,220 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பிற்கு ரூ.1,500 ஆக உயர்த்தியுள்ளது.
உதவியாளர்களின் மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.4,839ல் இருந்து ரூ.5,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பிற்கு 1,200 ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியில் சேர வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்துணவு விநியோகத்தை தொடங்க வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.