தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபாகரன். இவர் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அந்த ஆலையில் 45 கட்டடங்கள் உள்ளன.
அதில் ஒரு கட்டடத்தில், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் ஆகிய 3 ரசாயனங்களை கொண்டு, ஃபேன்சி வெடி தயாரிப்பதற்காக குழாயில் மருந்து செலுத்தும் பணி ஒரு கட்டடத்தில் நடந்து வந்துள்ளது.
அந்த கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இதில் சிக்கிய தொழிலாளர்களான ஈராச்சியை சேர்ந்த ராமர், தொட்டம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (47), குமாரபுரத்தை சேர்ந்த பொய்யாழி மகன் தங்கவேல் (43) மற்றும் நாலாட்டின்புத்தூரை சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்தவுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.