'சைபர் தாக்குதல் நடத்தினால் யாரையும் தொடர்புகொள்ள முடியாது': தமிழக மாணவர்கள்

ரஷியா சைபர் தாக்குதல் நடத்த இருப்பதால் எங்களுடைய தொலை தொடர்புகள் இன்னும் சில மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும். உறவினர்கள் தொடர்பு கொள்ள முடியாது.
உக்ரைனில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.
உக்ரைனில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.

ரஷியா சைபர் தாக்குதல் நடத்த இருப்பதால் எங்களுடைய தொலை தொடர்புகள் இன்னும் சில மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும். உறவினர்கள் தொடர்பு கொள்ள முடியாது. மேலும் இரண்டு வாரத்திற்கு தேவையான உணவுகள் மட்டுமே கையிருப்பு உள்ளது. உக்ரைனில் இருந்து மாணவர்கள் உருக்கமான தகவல் தெரிவித்தனர்.

உக்ரைன் மீது ரஷியா கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

குறிப்பாக உக்ரைன் தலைநகரான கீவ் பகுதியில் கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. அந்த கீவ் பகுதியில் உள்ள நேஷனல் மெடிக்கல் கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த தமிழக மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கூடுதல் விமான கட்டணம் கொடுத்து மாணவர் விஷ்வா என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தார் .இவர் இரண்டாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் ஆவார். இவர் மூலம் உக்ரைனில் உள்ள மாணவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலாம் ஆண்டு படிக்கும் மதுரை சேர்ந்த ஆஸ்பிரின், வேலூரைச் சேர்ந்த அக்ஷயா, தஞ்சாவூரை சேர்ந்த அருள், வேலூரை சேர்ந்த அஸ்வத் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த நிதின் ஆல்வின் கிஷோர் ஆகியோர் கூறும்போது, நாங்கள் இருக்கும் கீவ் நேஷனல் மெடிகல் கல்லூரியில் வெளியே வரமுடியாத சூழல் உள்ளது. 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் வியாழக்கிழமை கடைகளுக்கு சென்று இரண்டு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துள்ளோம். அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இந்திய மாணவர்களும் எங்கள் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான போர் விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளன. பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா சைபர் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தினால் அனைத்து தொலை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடும். அப்போது எங்களது உறவினர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு பேச முடியாத நிலை ஏற்படும். நாங்கள் தற்போது வரை மிகவும் பத்திரமாக உள்ளோம். இந்தியா வர நாங்கள் விமான டிக்கெட் போட்டு இருந்தோம். ஆனால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் தற்போது என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com