சென்னை: சென்னை மெரீனா கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அருகே உள்ள திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 9 பேர் மெரீனா கடற்கரைக்கு சனிக்கிழமை காலை வந்தனர்.
அவர்களில் சுதேசிநகர் காவேரி தெருவைச் சேர்ந்த அணில் மகள் ஆகாஷ் (15), ஹரிஷ் (13) ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் இருவரும் முறையே 10-ஆம் வகுப்பும், 8-ஆம் வகுப்பும் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
9 பேரும் மெரீனா கடற்கரையின் நேதாஜி சிலையின் பின்புறம் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது அங்கு வந்த பெரிய அலையில் ஆகாஷூம், ஹரிஷூம் சிக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த அவரது நண்பர்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனார்கள்.
இதற்கிடையே மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மெரீனா மீட்பு படையினர், உடனே அங்கு வந்து இருவரையும் தேடினர்.
சிறிது நேர தேடலுக்கு பின்னர் இருவரையும் சடலமாக மீட்புப் படையினர் அங்கிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட இருவர் சடலத்தையும் மெரீனா போலீஸார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தின் விளைவாக, மெரீனா கடற்கரை பகுதியில் போலீஸார் மற்றும் மீட்புப் படையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.