தீவிரவாத தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி - சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் 

திரிபுரா மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில் குண்டடிபட்டு பேரையூர் அருகே பழையூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.
எல்லை பாதுகாப்பு படை வீரர் கமலரெங்கன் சடலத்திற்கு மரியாதை செலுத்திய பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரோஜா.
எல்லை பாதுகாப்பு படை வீரர் கமலரெங்கன் சடலத்திற்கு மரியாதை செலுத்திய பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரோஜா.

பேரையூர்: திரிபுரா மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில் குண்டடிபட்டு பேரையூர் அருகே பழையூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரில் ஆயுதப்படை காவலர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய மதுரை ஆயுதப்படை காவலர்கள்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கமலரெங்கன்(38). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கமலரெங்கன் 2004-ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர் பணியில் சேர்ந்தார். தற்போது திரிபுரா மாநிலம் அகர்தலாவிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள சி.கே. பாடி மலைபகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு தீவிரவாதிகள் சுட்டதில் உடலில் குண்டுக்காயம் பட்டு கமலரெங்கன் வீர மரணம் அடைந்தார். கமலரெங்கன் எல்லை பாதுகாப்பு படை வீரர் பணிமுடிய இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் கமலரெங்கன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

எல்லை பாதுகாப்பு படை வீரர்  கமலரெங்கன்.
எல்லை பாதுகாப்பு படை வீரர்  கமலரெங்கன்.

இந்நிலையில் இறந்த கமலரெங்கன் சடலம் சொந்த ஊரான பழையூருக்கு கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டது. பெங்களூரிலிருந்து எல்லை பாதுகாப்பு படை வாகனத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வந்தது. தொடர்ந்து பழையூர் மயானத்தில் கமலரெங்கன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரோஜா, சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமொழி உட்பட காவல்துறை அதிகாரிகளும், ராணுவ பயிற்சி  அதிகாரி பழனியம்மாள், பள்ளி மாணவர்களும், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து மதுரை ஆயுதப்படை காவலர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்த பின்னர் பழையூர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. தீவிரவாத தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உயிர் இழந்த சம்பவம் பழையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com