சீர்காழி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் வெற்றி பெற்ற அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கு சீர்காழி நகராட்சியில் நகராட்சி ஆணையர் இப்ராகிம் வார்டு உறுப்பினர்களுக்கு பதவியேற்பு உறுதிமொழியை வாசித்து உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அனைத்து வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். இதேபோன்று வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மார்ச் 4ஆம் தேதி நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.