குமாரபாளையம் நகராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் வந்து பதவி ஏற்ற சுயேச்சை கவுன்சிலர்கள்!

குமாரபாளையம் நகராட்சியில் பதவியேற்புக்கு வரும்போது கடத்தப்படும் அபாயம் உள்ளதாக எழுந்த புகாரால் சுயேச்சை கவுன்சிலர்கள்
குமாரபாளையம் நகராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் வந்து பதவி ஏற்ற சுயேச்சை கவுன்சிலர்கள்!

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியில் பதவியேற்புக்கு வரும்போது கடத்தப்படும் அபாயம் உள்ளதாக எழுந்த புகாரால் சுயேச்சை கவுன்சிலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தனி வாகனத்தில் வந்து பதவியேற்றதால் பரபரப்பு நிலவியது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு, திமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு 14 இடங்களையும், அதிமுக தனித்துப் போட்டியிட்டு 10 இடங்களையும் பிடித்தது. திமுக, அதிமுக அதிருப்தி வேட்பாளர்கள் சுயேச்சைகளாகக் களமிறங்கி 9 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இத்தேர்தலில், திமுக நகரப் பொறுப்பாளர் எம்.செல்வம், அதிமுக நகரச் செயலாளர் ஏ.கே.நாகராஜன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தோல்வியடைந்தனர். இங்கு, தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற 17 பேரின் ஆதரவு தேவை. திமுக, அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத இழுபறி நிலையில், சுயேச்சைகளின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது.

இந்நிலையில், தேர்தலில் நகரமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பதவியேற்க வரும் கவுன்சிலர்கள் கடத்தப்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் திமுக நகரச் செயலாளரும், 25-வது வார்டு கவுன்சிலருமான கோ.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தை சுற்றி புதன்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நகராட்சி ஊழியர்கள், போலீசார் தவிர யாரையும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் பதவி ஏற்பு விழா நகராட்சி ஆணையாளர் சசிகலா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் தொடங்கியது. அப்போது, முதலில் வந்த திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 7 பேர் பதவி ஏற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் தனியே பதவியேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தனி வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதிமுக, திமுக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் உள்பட 18 பேர் பதவி ஏற்றனர். தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்துச் சென்ற இவர்கள் மீண்டும் தனி வாகனத்தில் ஏறி நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர், நீண்ட நேரம் கழித்து முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் கே.எஸ்.பாலசுப்பிரமணி உட்பட 4 அதிமுக உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். சுயேச்சைகள் 9 பேர் வெற்றி பெற்றதால், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற முயன்று வருகின்றனர். சுயேச்சைகளின் முயற்சிகளுக்கு திமுக, அதிமுக கவுன்சிலர்கள் சிலரும் ஆதரவளிப்பதால், தலைவர் பதவியை சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com