அவிநாசி: அவிநாசி காந்திபுரம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் வியாழக்கிழமை குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி மார்ச் 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாசிவராத்திரி, கொடியேற்றம் நடைபெற்றது.
மார்ச் 2-ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை அலகு தரிசனம், இரவு குண்டத்துக்கு பூப்போடுதல், அம்மனுக்கு வெண்ணை சாத்துபடி செய்தல் ஆகியவை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வெள்ளிக்கிழமை வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தேர் நிகழ்ச்சியும், சனிக்கிழமை கொடியிறக்கம், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை பேச்சியம்மன் அபிஷேக பூஜைகளும், திங்கள்கிழமை மகா அபிஷேக உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.