தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 18-வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்று கடந்த 2ஆம் தேதி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு 14-ஆவது வார்டு திமுக உறுப்பினர் சுகுன சங்கரி மற்றும் 5-வது வார்டு அதிமுக உறுப்பினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் அதிமுக வார்டு உறுப்பினர் தாக்கல் செய்த மனுவை வழிமொழிந்தும், முன்மொழிய ஆள் இல்லாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் 14-வது வார்டு திமுக உறுப்பினர் சுகுன சங்கரி போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் உறுதி செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சுகுன சங்கரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்து தலைவர் இருக்கையில் அமரவைத்து பாராட்டினர். பேரூராட்சி தலைவர் தமிழக முதல்வருக்கும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருக்கும், வாக்களித்த சக வார்டு உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.