மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோயிலில் உலக நன்மை வேண்டியும், நாடு நலம் பெறவும் அனைத்து மக்களுக்கும் எல்லா வகையான செல்வங்களும் கிடைக்க வேண்டியும் ஆனந்தவல்லி அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து அம்மனுக்குரிய திருநாமங்கள் சொல்லி பூஜைகள் செய்தனர். அப்போது கோயில் மண்டபத்தில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில் திருவிளக்கு பூஜை வழிபாட்டின் நன்மை குறித்து சிவாச்சாரியார் பரத்வராஜ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
திருவிளக்கு பூஜை வழிபாட்டின் நிறைவாக மங்களராத்தி நடைபெற்று அதன்பின் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கோயிலுக்கு வந்து இந்த திருவிளக்கு பூஜையைக் கண்டு அம்மனை தரிசித்தனர். கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை மானாமதுரை பகுதி பெண் பக்தர்கள் கூடி செய்திருந்தனர். திருவிளக்கு வழிபாட்டை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் இரவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் உலக நன்மை வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.