மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசித் திருவிழாவில் முக்கிய வைபவமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.
திருப்புவனம் புதூர் மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழா தொடக்கத்தின் போது திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.
திருவிழாவின் முக்கிய வைபவமாக நடைபெற்ற பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலையில் இருந்து சனிக்கிழமை காலை வரை விடிய விடிய பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டி கோயிலை சுற்றி வந்தும், கோயிலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும், பொம்மைகள் சுமந்து எடுத்து வந்தும் வேண்டுதலை நிறைவேற்றி மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
மாரியம்மனை தரிசிக்க கோயில் வளாகத்தில் நீண்ட வரிசை இருந்தது. மாரியம்மன் கோயில் பொங்கல் வைபவத்தை முன்னிட்டு திருப்புவனம் நகர் பகுதி முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தணிக்கப்பட்டது.
மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கோயில் வளாகம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. திருவிழாவில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.