50 சதவிகிதத்தினருக்கு அதிகமான இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “எழுவர் விடுதலை குறித்து உரிய நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்” எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழக சட்டப்பேரவையில் எழுவர் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படுமா எனும் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி தேவை ஏற்பட்டால் தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றும் எனக் கூறினார்.
மேலும் மகாராஷ்டிரத்தின் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையையொட்டி தமிழகத்தில் உள்ள 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் ரகுபதி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.