சிதம்பரம்: சிதம்பரத்தில் 6 மாதங்களுக்கு மேலாக கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மூலிகை பானத்தை தனியார் இனிப்பகம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள இனிப்பக உரிமையாளர் கணேஷ். பொறியாளரான இவர் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகத்திட கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுக்கு, ஏலக்காய், வெற்றிலை, மிளகு,கிராம்பு, துளசி, மல்லி, திப்பிலி, கிராம்பு, கற்பூரவல்லி, பனைவெல்லம், எலுமிச்சை பழம், சீரகம் அகிய மூலிகை பொருள்களை கொண்டு கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் மூலிகை பானத்தை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
பொதுமக்கள் பலர் காலையில் இருந்து மாலை வரை கடைக்கு சென்று இந்த மூலிகை பானத்தை அருந்தி வருகின்றனர். ஒருநாளைக்கு 300 முதல் 400 பேர் இந்த பானத்தை அருந்தி செல்கின்றனர். பொதுமக்கள் பலர் தினமும் வாடிக்கையாளர் போல அங்கு சென்று மூலிகை பானத்தை அருத்தி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிதம்பரம் தெற்குவீதி இனிப்பகத்தில் ஒருவர் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மூலிகை பானம் அருந்துகிறார்.
மேலும் கடைக்கு மூலிகை பானத்தை அருந்த செல்லும் பொதுமக்களிடம் கடை பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் கை கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னரே சமூக இடைவெளியுடன் நாற்காலியில் அமர வைத்து மூலிகை பானத்தை வழங்குகின்றனர்.
இதுகுறித்து இனிப்பக உரிமையாளர் கணேஷ் கூறுகையில், உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்த நிலையில் இந்தியர்களின் உணவு பழக்க வழக்கத்தால் இந்தியாவில் தொற்று மாற்ற நாடுகளை காட்டிலும் குறைந்த அளவே உள்ளது.
பல்வேறு அமைப்பினர் இதனை கட்டுப்படுத்திட கபசுர குடிநீர், ஆயுஷ் ஆல்பம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். எங்கள் கடை சார்பில் தமிழக பாரம்பரிய மூலிகை பொருள்கள் கலந்து மூலிகை பானத்தை இலவசமாக வழங்கி வருகிறேன். இதன் மூலம் என்னால் முடிந்த அளவுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்து வருகிறேன் என்ற மன திருப்தி கிடைக்கிறது என்றார்.