திருவனந்தபுரம் நவராத்திரி: தெய்வத் திருமேனிகளுக்கு களியக்காவிளையில் வரவேற்பு

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அரசு சார்பில் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் வியாழ
களியக்காவிளையில் நவராத்திரி சுவாமி விக்ரகங்களுக்கு வரவேற்பளிக்கும் தமிழக, கேரள அதிகாரிகள்.
களியக்காவிளையில் நவராத்திரி சுவாமி விக்ரகங்களுக்கு வரவேற்பளிக்கும் தமிழக, கேரள அதிகாரிகள்.

களியக்காவிளை: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அரசு சார்பில் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கம்பர் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமியை பல்லக்கில் எடுத்து வந்தனர். சுவாமி விக்ரகங்களுக்கு முன்னால், மன்னர் பயன்படுத்திய உடைவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இந்த சுவாமி விக்ரகங்களுக்கு மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் கேரள போலீஸாரின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமையிலான தமிழக அதிகாரிகள் கேரள தேவஸ்வம் போர்டு அதிகாரிகளிடம் ஊர்வலம் பொறுப்பை ஒப்படைத்தனர். 

அப்போது தமிழக, கேரள அறநிலையத்துறை அதிகாரிகளால் குத்துவிளக்கு ஏற்றப்படாமல், பெயரளவுக்கான சடங்காக இந்த வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட்டது இப்பகுதி பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த விழாவில் கேரள தேவஸம் போர்டு தலைவர் ஆணையாளர் பி.எஸ். திருமேனி, திருவனந்தபுரம் மாவட்ட தேவஸ்வம் போர்டு துணை ஆணையாளர் பி. மதுசூதனன்நாயர், உதவி ஆணையாளர் கே. உஷா, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தக்கலை சரக துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், திருவனந்தபுரம் மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், திருவிதாங்கூர் நவராத்திரி திருவிழா அறக்கட்டளை தலைவர் ஜி. மாணிக்கம், செயலர் எஸ்.ஆர். ரமேஷ், இணை செயலாளர் என். விக்ரமன், கேரள மாநில இந்து ஐக்கியவேதி செயலர் கே. பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குழித்துறை மகாதேவர் கோவிலில் இருந்து காலை 5 மணிக்கு கிளம்பிய சுவாமி ஊர்வலம் படந்தாலுமூடு பகுதிக்கு வந்து அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருப்புக்குப் பின் காலை 8 மணிக்கு களியக்காவிளைக்கு கொண்டு வரப்பட்டது. 

இதைத் தொடர்ந்து சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு, அதன் பின்னர் கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் ஆண்டாண்டு காலமாக பாறசாலை மகாதேவர் கோவிலுக்கு சுவாமி விக்ரகங்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின் நெய்யாற்றின்கரை கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு பாறசாலை கோவிலுக்குச் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுவாமி விக்ரகங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com