திருவாரூர்: திருவாரூர் பகுதியில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூறு ஏக்கர் குறுவை பயிர்கள் சாய்ந்து உள்ளன இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின்பு திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டில் சரியான நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வந்த காரணத்தினாலும், விவசாயிகளுக்கு தேவைப்பட்ட நேரத்தில் மழை பொழிந்த காரணத்தினாலும் குறுவை சாகுபடி நல்ல முறையில் நடைபெற்றதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்வதால் முழுவதுமாக பயிர்கள் முளைக்கத் தொடங்கிய நெல்.
தற்போது குறுவை நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக திருவாரூரை அடுத்த சேந்தனாங்குடி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெல் பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். வயல்களில் உள்ள தண்ணீரை வடிய வைத்தால் மட்டுமே பயிர்களை அறுவடை செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மழை பெய்யாமல் இயந்திரம் மூலம் அறுவடை செய்தால் ஏக்கருக்கு ரூ. 2,500 மட்டுமே செலவாகும். தற்போது மழை பெய்த காரணத்தினால் ஒரு ஏக்கர் அறுவடை செய்வதற்கு இரண்டு மணி நேரத்தில் இருந்து கூடுதல் நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் இயந்திரத்திற்கு ரூ.6,000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து மழை பெய்தால் முழுவதுமாக பயிர்கள் முளைக்கத் தொடங்கிவிடும், இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.