பெருந்தொற்றிலும் கிராமம் தேடி போகும் கல்வி: ஆசிரியரின் அசராத முயற்சி!

​மாணவர்களால்தான் பள்ளிக்கு வர முடியாது, ஆசிரியர்களால் குழந்தைகளிடம் செல்ல முடியுமல்லவா என்று கிராமங்களுக்குச் சென்றே பாடம் எடுக்கிறார் ஆசிரியர் மீனா.
பாடம் எடுக்கும் ஆசிரியர் மீனா
பாடம் எடுக்கும் ஆசிரியர் மீனா

மாணவர்களால்தான் பள்ளிக்கு வர முடியாது, ஆசிரியர்களால் குழந்தைகளிடம் செல்ல முடியுமல்லவா என்று கிராமங்களுக்குச் சென்றே பாடம் எடுக்கிறார் ஆசிரியர் மீனா.

கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வசதி வாய்ந்த மாணவர்கள் இணையவழியில் தொடர்ந்து வகுப்புகளில் பங்கெடுக்கின்றனர். ஆனால், கிராமப்புறங்களிலுள்ள மாணவர்கள் இணைய வசதியோ, தனி செல்போன் வசதியோ இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுபோன்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தினந்தோறும் கிராமங்களுக்குப் பயணித்து நேரில் பாடம் நடத்துகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர்தான் மீனா ராமநாதன்.

மீனா ராமநாதன் காவரப்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் விராலிமலை பள்ளிக்கு அருகே தினந்தோறும் இரண்டு பகுதிகளுக்கு நேரில் செல்கிறார். ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 3 மணி நேரம் பாடம் எடுக்கிறார். கிராமங்களுக்குச் செல்லும் முன்பே மாணவர்களுக்கு மீனா தகவலைத் தெரிவிப்பதன்மூலம், அவர்கள் முன்கூட்டியே வகுப்புக்குத் தயாராகிறார்கள்.

பல்வேறு கிராமங்களுக்குச் செல்ல இரு சக்கர வாகனத்தில் அவர் 10 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார். மார்ச் 2021-இல் இருந்தே இதைக் கடைப்பிடித்து வரும் மீனாவால், கரோனா இரண்டாம் அலையில் தொடர முடியவில்லை. இதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் மீண்டும் இந்தப் பணிகளைத் தொடங்கியுள்ளார் மீனா.

தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களை மீனா நடத்துகிறார். கிராமங்களில் ஏதேனும் திறந்தவெளி இடத்தைப் பிடித்து அங்கு சிறு வகுப்பறையை உருவாக்கிவிடுகிறார். வகுப்புக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அவர் உறுதிப்படுத்துகிறார்.

மீனாவிடம் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் தினக் கூலிகள் என்பதால், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

பெற்றோர் ஒருவர் தெரிவித்தது:

"எங்கள் குழந்தைகள் நன்றாகப் படிப்பதில்லை. அது எங்களுக்கு வருத்தமளித்தது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி தேவை. ஆசிரியர் மீனாவின் முயற்சிகள் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது."

இதுபற்றி மீனா தெரிவித்தது:

"இந்தக் குழந்தைகள் அடிப்படையையே மறந்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால், அது அவர்களுடைய தவறு அல்ல. எனவே, நான் அவர்களுக்கு அடிப்படையிலிருந்து தொடங்குகிறேன். நேரில் பாடம் எடுப்பதற்கு மாற்று எதுவும் இல்லை."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com