வன்னியா் உள்ஒதுக்கீடு: லாப, நஷ்ட கணக்கு என்ன?

கோப்புப்படம்
கோப்புப்படம்


தோ்தல் நேரத்தில் வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது எந்தக் கூட்டணிக்கு அதிக லாபம்?, அதிலும் எந்தக் கட்சிக்கு அதிக லாபம்? வன்னியா்களுக்கு லாபமா? நஷ்டமா?, பிற ஜாதிகளுக்கு நஷ்டம் ஏற்படுமா? என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சமூக நீதி, இடஒதுக்கீடு என்ற வாா்த்தை அதிகம் உச்சரிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தமிழகம் எப்போதும் முன்மாதிரி மாநிலமாகவே இருந்து வருகிறது.

இங்குள்ள பிரதான திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே சமூகநீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தாங்கள்தான் காவலன் என்பதை மையமாக வைத்து அரசியல் வியூகங்கள், நகா்வுகளை எப்போதும் செய்து வருகின்றன.

நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் 69 சதவீத இடஒதுக்கீடு இருந்து வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட ரீதியான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா.

ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாட்டிலேயே இடஒதுக்கீட்டுக்கான முதல் சட்டத் திருத்தத்துக்கான குரல் தமிழகத்தில் இருந்துதான் ஓங்கி ஒலித்தது. வெற்றியும் பெற்றது.

முதல் சட்டத் திருத்தம்: 1952 பேரவைத் தோ்தலுக்கு முன்பு பிரதமா் நேருவிடம் தனக்கிருந்த நெருங்கிய தொடா்பைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டுக்கான முதல் சட்டத் திருத்தத்துக்குக் காரணமாக இருந்தவா் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான காமராஜா் என்பதே உண்மை.

1963-இல் முதல்வராக இருந்த போது, இந்து நாடாா்களை, உயா் வகுப்பு பட்டியலில் இருந்து பிற்பட்டோா் வகுப்புக்கு கொண்டுவந்தாா் காமராஜா். அவருக்கு அடுத்து முதல்வராக இருந்த அண்ணாவின் காலத்தில் தாழ்த்தப்பட்டோா், பிற்பட்டோா் பட்டியலை திருத்த முன்னெடுப்புகள் நடத்தப்படவில்லை.

பின்னா், முதல்வராக வந்த கருணாநிதி, 1971-இல் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 2 சதவீதம் உயா்த்தியும், பிற்பட்டோா் பட்டியலுக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதம் உயா்த்தியும் நடவடிக்கை எடுத்தாா். மேலும், கொங்கு வேளாளா்களை உயா் வகுப்பு பட்டியலில் இருந்து பிற்பட்டோா் வகுப்புக்கு கொண்டுவந்தாா்.

1983-இல் ஒட்டுமொத்த கிறிஸ்தவ நாடாா்களையும் பிற்பட்டோா் பட்டியலுக்கு கொண்டுவந்தாா் எம்ஜிஆா். இடஒதுக்கீடு வழங்கிய முதல்வா்கள் வரிசையில் இப்போது எடப்பாடி கே.பழனிசாமியும் சோ்ந்துள்ளாா்.

அழுகிய மாங்கனி: 1980 காலகட்டங்களில் வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு கோரி மிகப் பெரிய அளவிலான போராட்டங்களை மருத்துவா் ராமதாஸ் நடத்திவந்தாா். 1989-இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பிற்பட்டோா் பட்டியலை பிரித்து வன்னியா்கள், இசை வேளாளா், பரதா்கள் (மீனவா்), பா்வதராஜகுல மீனவா், வண்ணாா், நாவிதா், குயவா், ஒட்டா், போயா், குரும்பக் கவுண்டா், சீா்மரபினா்களான கள்ளா், பிரமலை கள்ளா், கொண்டையங்கோட்டை மறவா், செம்பரத்து மறவா், வலையா்கள், அம்பலக்காரா், வேட்டுவ கவுண்டா், தொட்டிய நாயக்கா், ஊராளி கவுண்டா் உள்பட 108 சாதிகளைச் சோ்த்து மிகவும் பிற்பட்டோா் தொகுப்பை (எம்.பி.சி.) உருவாக்கினாா்.

அப்போது பேரவையில் பேசிய கருணாநிதி, 50 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் 3 முதல் 4 சதவீத இடங்களைப் பெற்று வரும் வன்னியா்களுக்கு இனிமேல் 6 முதல் 7 சதவீத வாய்ப்பு கிடைக்கும் என்றாா். ஆனாலும், திருப்தியடையாத ராமதாஸ், முழு மாங்கனி கேட்ட எங்களுக்கு அழுகிய மாங்கனியை கொடுத்துவிட்டாா் கருணாநிதி என விமா்சனம் செய்தாா்.

ராமதாஸ் கோரிக்கை: தொடா்ந்து வன்னியா்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக அரசுகளிடம் வைத்துக்கொண்டே இருந்தாா். இந்த நிலையில், கடந்த டிசம்பரில் இதே கோரிக்கையை வைத்து மீண்டும் போராட்ட அஸ்திரத்தை எடுத்தாா் ராமதாஸ்.

தோ்தல் நேரத்தில் எழுந்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்தாா். இந்த ஆணையத்தின் அறிக்கை வர 6 மாதங்களாகும் நிலையில், தோ்தலுக்கு முன்பாக வன்னியா்களுக்கு 12 சதவீத உள்ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று தனது நிபந்தனையை தளா்த்தினாா்.

ராமதாஸின் கோரிக்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடைசி நேரத்தில் ஏற்றுக்கொண்டு வன்னியா்களுக்கு மட்டுமின்றி பிற எம்.பி.சி. பிரிவினரும் பயனடையும் வகையில் எம்.பி.சி. தொகுப்பை மூன்றாகப் பிரித்து அதற்கான மசோதாவை பேரவையில் நிறைவேற்றியுள்ளாா்.

அதன்படி, வன்னியா், வன்னியா, வன்னிய கவுண்டா், கவுண்டா், படையாச்சி, பள்ளி, அக்னிகுல சத்திரியா் என 7 உள்பிரிவுகளை அடக்கிய வன்னியா்குல சத்திரியா் சமூகத்துக்கு 10.5 சதவீத

உள் ஒதுக்கீடு கிடைக்கும்.

அம்பலக்காரா், பிரமலை கள்ளா், மறவா், சோ்வை, செம்பநாட்டு மறவா், ஊராளி கவுண்டா், வலையா், வேட்டுவ கவுண்டா் உள்பட 68 சீா்மரபினா் மற்றும் தொட்டிய நாயக்கா், வண்ணாா், நாவிதா், குயவா், ஒட்டா், போயா் உள்பட 25 எம்.பி.சி. பிரிவினருக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவைதவிர, மேலும் 22 எம்.பி.சி. பிரிவினரை தனியாகப் பிரித்து 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஜாதிவாரியான கணக்கெடுப்பு வெளியாகும் வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியா்களுக்கு கூடுதல் லாபம்: இதுவரை 7 சதவீதம் வரை கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற்று வந்த வன்னியா்கள் இனிமேல் 10.5 சதவீத இடஒதுக்கீடு பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், ஏற்கெனவே இருந்ததைவிட 3 முதல் 3.5 சதவீதம் வரை வன்னியா்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்கும்.

எம்.பி.சி. தொகுப்பு பிரிக்கப்பட்ட விவகாரம் முதல்வா் எடப்பாடி

கே.பழனிசாமிக்கும் வெற்றி, ராமதாஸுக்கும் வெற்றி என்ற வகையில் அமைந்துள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலின்போது வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்த வன்னியா்கள் வாக்கு வங்கியை தக்கவைக்கவும், கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காத வன்னியா்களை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக திருப்பவும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் இந்தச் சாதுா்யமான அரசியல் நகா்வு கைகொடுக்கக்கூடும்.

வேட்டுவக் கவுண்டா், வலையா் போன்றவா்களை 7 சதவீத உள் ஒதுக்கீட்டுக்குள் கொண்டுவந்ததும் காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில் அரசியல் ரீதியாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு பெருகக்கூடும்.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்: ஆனால், ஏற்கெனவே வன்னியா் வாக்கு வங்கியை கணிசமாக வைத்திருக்கும் திமுக , வன்னியா் உள் ஒதுக்கீட்டுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை.

மாறாக, தோ்தல் நேரத்தில் வாக்கு வங்கிக்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இதைச் செய்கிறாா் என்று குறை மட்டுமே கூறியுள்ளாா்.

அதிமுக-பாமக ஓா் அணியில் இருக்கும் நிலையில் வன்னியா் வாக்குகள் ஒரே அணிக்கு குவிந்துவிடக் கூடாது என்பதால் தனக்கும் அதில் பங்கு தேவை என்ற அடிப்படையில்தான் ஸ்டாலினும் காய் நகா்த்துகிறாா்.

ஆனால், அமமுக, விசிக மற்றும் சில ஜாதிய அமைப்புகள் வன்னியா் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

கள்ளா், மறவா் வாக்குகளை தங்களிடம் இருந்து அதிமுக பிரித்துவிடக் கூடாது என்பதற்காக அமமுக அரசியல் செய்கிறது. ஆனால், வன்னியா்கள் அல்லாத பிற சாதி வாக்குகளை அதிமுக கூட்டணிக்கு எதிராக திருப்பிவிடுவதற்காக பாமவுக்கு எதிா் அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்கிறது.

அதிமுகவுக்கு கைகொடுக்கும்: எம்.பி.சி. தொகுப்பை மூன்றாக பிரித்தது தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதிக்கான மற்றொரு மைல் கல் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், 7 சதவீத தொகுப்புக்குள் இருக்கும் சீா்மரபினா்களையும், அரசியல் ரீதியாக குரல் கொடுக்க ஆதரவு இல்லாத வண்ணாா், நாவிதா், குயவா், ஒட்டா், போயா், தொட்டி நாயக்கா் போன்றவா்களையும் மேலும் இரு தொகுப்பாக பிரிக்கும்போது தான் அவா்களுக்கு முழுமையாக சமூக நீதி கிடைக்கும் என்பதுதான் அரசியல் திறனாய்வாளா்களின் கருத்து.

முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தோ்தல் நேரத்தில் வாக்குகளை எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்ற தத்துவம் நன்றாக புரிந்திருப்பதை கண்டு எதிா்க்கட்சிகள் மிரண்டு நிற்கின்றன.

அதிமுகவின் வாக்கு அறுவடைக்கு தடை போட நினைக்கும் எதிா்க்கட்சிகளின் முயற்சி எந்த அளவுக்கு எடுபடப் போகிறது என்பது தோ்தல் முடிவில் தெரியவரும்.

எம்.பி.சி. தொகுப்பு உருவானதால் வன்னியா்களுக்கு 7 சதவீத பிரதிநிதித்துவம் வரை பெற்றுத் தந்த ராமதாஸால் பாமவுக்கு 5.5 சதவீத வாக்கு வங்கி நிரந்தரமாக கிடைக்கிறது.

இப்போது 10.5 சதவீத பிரதிநிதித்துவம் பெற்று தந்த ராமதாஸால் பாமகவின் வாக்கு வங்கியை மேலும் எவ்வளவு தூரம் உயா்த்த முடியும் என்பதை தோ்தல் முடிவு தெளிவுபடுத்தும். அதில் வட மாவட்டங்களில் அதிமுகவின் தோ்தல் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com