ஐபேக்குக்கு முன்; ஐபேக்குக்குப் பின்!

1949 செப்டம்பர் 17-ஆம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாளாக இருந்தாலும், 1956-இல் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான் தேர்தல் பாதைக்கு வருவது என்ற முடிவை அக்கட்சி எடுத்தது.
ஐபேக்குக்கு முன்; ஐபேக்குக்குப் பின்!

1949 செப்டம்பர் 17-ஆம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாளாக இருந்தாலும், 1956-இல் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான் தேர்தல் பாதைக்கு வருவது என்ற முடிவை அக்கட்சி எடுத்தது.

பேச்சாற்றல், எழுத்தாற்றல் கொண்டவர்கள்,  நாடக மற்றும் திரைக் கலைஞர்களின் ஆதரவு ஆகியவற்றை துணையாக வைத்துக் கொண்டு, பிரசார யுத்தியை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தனர் திமுக-வினர்.

இதன் விளைவாக, 1967-ஆம் ஆண்டில் காங்கிரûஸ அரியணையிலிருந்து அகற்றி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது திமுக. அப்போதைய தேர்தல் களத்தில் "கும்பி எரியுது,  குளு குளு ஊட்டி ஒரு கேடா', ”"பக்தவத்சலம் அண்ணாச்சி- அரிசி விலை என்னாச்சி', ”"காமராஜ் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி', "கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்'”என்பது போன்ற முழக்கங்களை திமுக முன்வைத்தது.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார் அண்ணாதுரை. ஆனால் தேர்தல் வெற்றிக்கு இதை நிறைவேற்ற முடியாமல்போனதால், மத்திய அரசு மானியம் வழங்க மறுக்கிறது எனக் கூறி திட்டத்தை கைவிட்டார்.

திமுக தொடங்கியது முதலே மாநாடுகளும், பொதுக் கூட்டங்களும்தான் அக்கட்சியையும், தொண்டர்களையும் உயிர்ப்புடன் வைத்திருந்தன. 

முதல் 5 மாநில மாநாடுகளும் தலா 4 நாள்கள் நடத்தப்பட்டன. பின்னர் 3 நாள்கள், 2 நாள்கள் என குறுகினாலும், மாநாடுகளில்தான் தங்களது பலத்தை வெளிக்காட்டினர் திமுகவினர்.

திமுக வருகைக்கு முன்னர் தமிழகத்தில் கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் என்பது வரையறைக்குள் இல்லாதவை. திமுக மட்டுமே இந்த நிகழ்வுகளை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்தது.

 கருத்தரங்குகள், உரை வீச்சுகள், விவாதம், கலை நிகழ்வுகள், மூத்த தலைவர்களின் உரைகள், வரவேற்புரை, தலைமையுரை, முன்னிலை உரை, நன்றியுரை என அனைத்தும் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டன.  

இதன் பிறகுதான், பிற கட்சிகளும் இந்த வரையறுக்குகள் தங்களது மாநாடு மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தத் தொடங்கின. 

இந்த வகையில் தமிழகத்தில் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது திமுக-வும், திராவிட இயக்கத் தலைவர்களுமே என்பதை மறுப்பதற்கில்லை.  திமுக சார்பில் இதுவரை 10 மாநில மாநாடுகள் நடைபெற்றுள்ளன.  அதில் 5 மாநாடுகள் திருச்சியில்தான் நடத்தப்பட்டிருக்கின்றன.

திமுக-வுக்கும், திருச்சிக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.   திருச்சியில் 1956-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டி என்ற முடிவு எடுக்கப்பட்டது.

திருச்சி குதிரை பந்தயச் சாலையில் 1956, மே மாதம் 17, 18, 19, 20 என நான்கு நாள்களுக்கு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், கட்சியினரிடம் நடத்திய வாக்கெடுப்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 56,942 பேர் வாக்களித்திருந்தனர். போட்டியிட வேண்டாம் என 4,203 பேர் வாக்களித்திருந்தனர். இதில் கிடைத்த ஒப்புதலைத் தொடர்ந்துதான் திமுகவினர் தேர்தல் களத்தில் இறங்கினர்.  

அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, 1971-இல் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில்தான்  அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்,  மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்ற ஐம்பெரும் முழக்கங்களை முன்வைத்தார் கருணாநிதி.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் குளித்தலை தொகுதியில்தான் கருணாநிதி முதல்முறை தேர்தல் களம் கண்டார். இதன்காரணமாகவே, தீரர்கள் கோட்டம் திருச்சி என்று தனியே புத்தகம் எழுதி, திருச்சிக்கும் தனக்குமுள்ள நெருக்கத்தையும், கட்சியின் தீர செயல்களையும் விளக்கியுள்ளார் கருணாநிதி.

இத்தைய சிறப்பு மிக்க தீரர்கள் கோட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்ட பொதுக்கூட்டம்,  திமுக-வின் வரையறையை மாற்றியமைத்து, நவீன கலாசாரத்துக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. 

திமுக-வின் பொதுக்கூட்டம், மாநாடு என எதுவாக இருந்தாலும் காலை தொடங்கி இரவு வரை மேடையில் முழங்குவதற்கு பேச்சாளர்கள் எப்போதும் தயாராக இருப்பர். அவற்றை கேட்பதற்கு தொண்டர்களும்,  மக்களும் ஆர்வமாகக் கூட்டம் கலையாமல் கூடி நிற்பர். கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து மேடையேறி பேச வாய்ப்பு அளிக்கப்படும்.

ஆனால்,  திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) நடைபெற்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் மாபெரும் பொதுக்கூட்டம், அனைத்தையும் மாற்றியமைக்கும் வகையில் நடந்தேறியது.  

பொதுக்கூட்ட மேடை வடிவமைப்பு தொடங்கி, தொண்டர்கள் அமரும் இடம், உணவுக்கூடங்கள், குடிநீர், கழிப்பறை, புத்தக விற்பனை, கொடி விற்பனை, நுழைவு அனுமதி என அனைத்தும் ஐபேக் குழுவின் கையசைவில்தான் நடைபெற்றது. 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று கவனித்த கட்சியின் முதன்மைச் செயலர் கே.என். நேருவே, ஒலிபெருக்கியில் "உள்ளூர்காரர்களை விடுங்கப்பா ஐபேக் டீம்' என கூக்குரலிடும் நிலைக்கு உள்ளாக நேரிட்டது.

தமிழ்ப் பண்பாடு மற்றும் பெருமையை பறைசாற்றும் கலைநிகழ்வுகள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம்,  நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய தலைப்புகளின்கீழ் தலா மூவர் வீதம் பேசுவதாக இருந்தது. ஆனால்,  8 பேருக்கு மட்டும் தலா 5 நிமிஷங்கள் என்ற வகையில் விரைந்து பேசி முடிக்க உத்தரவிட்டது ஐபேக் டீம். கூடியிருந்த அத்தனை பேரையும் தனது கட்டுப்பாட்டில் நிகழ்வு முடியும் வரையில் வைத்திருந்தது ஐபேக் டீம்.

திமுக பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கும் சில நிமிஷங்கள் மட்டுமே பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.  அனைத்தும் டிஜிட்டல் மயம்,  நவீனத்துவம் என்றாக மாறிப்போனது. பிரமாண்ட மேடையிலும், அதன் அருகிலும் 300 அடி முதல் 500 அடி வரையிலான ராட்சத எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

 தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உற்சாகமாக கையசைத்து நடந்து செல்லும் வகையில், 500 அடியில் நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது. உதயசூரியன் வடிவிலான மேடையிலிருந்து இந்த நடைமேடையில் 20 நிமிஷங்கள் நடந்து சென்று பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்தவர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார் மு.க. ஸ்டாலின். 

எல்இடி திரைகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, திமுக குறித்து ஒலி, ஒளிக்காட்சிகளும், மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் குறித்த ஒலி, ஒளிக் காட்சிகளும் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டன. "ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போறாரு' என்ற பாடலும் அவ்வப்போது ஒலிக்கச் செய்யப்பட்டது.  மாலை 6.45 மணிக்கு மேடையேறிய ஸ்டாலின், 20 நிமிஷங்களுக்கு தொண்டர்களை உற்சாகப்படுத்திவிட்டு, தனது இருக்கைக்குத் திரும்பினார்.

தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் அமர ஒரு மேடையும், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், இதர அணி நிர்வாகிகள் அமர தனியே இரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தன. முன்னாள் எம்பி, எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் அமருவதற்கு மேடைக்கு முன்பாக குஷன் சோபாக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

ஸ்டாலின்  உரை முடிந்தவுடன், வானில் வண்ணஜாலங்கள் மின்னும் வகையில் வாணவேடிக்கை, மத்தாப்புகளை ஐபேக் டீம் கொளுத்தியது. மேலும், ஸ்டாலின் மேடை ஏறியபோதும் இன்னிசை கச்சேரிகளில் பயன்படுத்தும் மத்தாப்பு ஒளிகள், டிஜிட்டல் வண்ண ஒளிகள் மிளிரச் செய்யப்பட்டன.

1967-இல் நவீன தமிழகத்தை உருவாக்குவோம் என முழங்கினார் கருணாநிதி. இருப்பினும், மாநாடு, பொதுக்கூட்டம் என்றால் திமுக-வுக்கென ஓர் வரையறை இருந்தது. ஐபேக் டீம் வருகைக்கு பின்னர் இந்த வரையறை எல்லாமும் மாறிப்போனது. 

மாற்றம் ஒன்றே மாறாதது. தனியார் பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் திமுக,  ஐபேக் நிறுவன ஆதிக்கத்தின்கீழ் தங்களது நிகழ்வுகளை ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டிருப்பதுதான் வியத்தகு மாற்றம்; முன்னேற்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com