செய்யாறு: செய்யாறு அருகே விவசாயிகள் பயிரிட்டிருந்த ரோஜா, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர் தோட்டங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் உள்ள 405 ஏரிகளில் சுமார் 350 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெள்ளம் விளை நிலங்களில் பாய்ந்தும், தேங்கியதால் நூற்றக்கணக்கான ஏக்கர் நெல், மனிலா, பயிறுவகைகள், பூந்தோட்டங்கள் உள்ளிட்ட தோட்டப்பயிர்களும் சேதம் அடைந்துள்ளது.
வெம்பாக்கம் வட்டத்தில் மோரணம், சகாயபுரம், பூமந்தாங்கல் உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த நீண்டகால பணப்பயிர்களான ரோஜா, மல்லி, சம்பங்கி, செண்டுமலர், கேந்தி உள்ளிட்ட மலர்கள் பயிரிட்டு இருந்தன.
இந்நிலையில், இப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மழை நீரில் மூழ்கி தோட்டப்பயிர்கள் தேமடைந்துள்ளன. மோரணம் ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் விவசாயிகள் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த ரோஜா மற்றும் சம்பங்கி தோட்டம் ஏரி மழை வெள்ளத்தில் மூழ்கி செடிகள் அழுக தொடங்கியுள்ளன.
மோரணம் கிராமத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள ரோஜா.
மற்றும் சம்பங்கி செடிகள் நட்டு சுமார் ஐந்து மாதங்கள் குழந்தையை பராமரிப்பது போல கண்ணும், கருத்துமாக பராமரித்து வந்தால் 6-ஆவது மாதத்திலிருந்து பலனை கொடுக்கும், மேலும் இதனை மாதா, மாதம் கலையெடுத்து உரம் வைத்து பராமரித்து வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பலனை கொடுக்கக்கூடிய பயிர்கள் ஏக்கருக்கு பல ஆயிரங்கள் செலவு செய்து நட்டு பராமரித்து வந்தால் மலர் செடிகள் அதன் ஆயுள்காலத்தில் பல லட்சங்களை மகசூலாக வழங்கக்கூடியவையாகும். மலர் செடிகள் பலன் தரும் நேரத்தில் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
மேலும், தொடர் மழையின் காரணமாக மலர் செடிகளில் பூத்துள்ள பூக்களைக் கூட பறிக்க முடியாமல் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் .